search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை அடைப்பு"

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    கூடலூர் அடுத்த கொளப்பள்ளியை சேவீர் மட்டத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 4 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். நேற்று சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர்மறைவில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள், சிறுத்தையை சத்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.

    தொடர்ந்து காயம் அடைந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை பந்தலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.அங்கு ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் கடைகளை ஒதுக்குவதில் முன்னுரிமை தராமல் பொது ஏலத்தில் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஜவுளி மார்க்கெட் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் இழுப்பறி நீடித்து வந்தது.

    இதற்கிடையே புதிய வணிக வளாகம் கட்டுமான பணிக்கு முன்னரே அதன் அருகில் ஏற்கனவே கடை அமைத்துள்ள வியாபாரிகள் மாநகரா ட்சியின் அனுமதியின் பேரில் தற்காலிக கடை அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இதற்கு இடையே 60 நாளில் தற்காலிக கடைகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகத்தை ஏலத்தில் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 60 நாள் கெடு முடிவு அடைந்ததால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்ய வலியுறுத்தி கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட்டனர். மேலும் கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமியின் அறிவுறுத்தலையின்படி மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி அதிகாரிகள், ஜவுளி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீதிமன்ற உத்தரவு என்பதால் அமைச்சரோ, மாநகராட்சி நிர்வாகமோ ஒன்றும் செய்ய முடியாது என்றும், உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் இதற்கு மாற்று தீர்வாக புதிய வணிக வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த 120 கடைக்காரர்களுக்கு ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் எனப்படும் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சின்ன மார்க்கெட்டில் உள்ள இடங்கள் அளவீடு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது சின்ன மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அதன் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி கடைகள் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    சின்ன மார்க்கெட் பகுதியில் கனி மார்க்கெட் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி வர வரை பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு சின்ன மார்க்கெட் பகுதியில் கடை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக கனி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

    இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். தற்போது எங்களுக்கு மாநகராட்சி சார்பில் சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகள் ஒதுக்கு வதாக தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் எங்களுக்கு தீபாவளி வரை இதை பழைய இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி காரணமாக வியாபாரம் எங்களுக்கு சூடு பிடிக்கும்.

    இதனால் பல ஜவுளி வியாபாரிகள் கடனுக்கு சரக்குகளை வாங்கியுள்ளனர். அதை தீபாவளி வியாபாரம் மூலம் தான் எங்களால் எடுக்க முடியும். தீபாவளி முடிந்ததும் நாங்கள் சின்ன மார்க்கெட் பகுதிக்கு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் மாநகராட்சி சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே இன்று மதியம் மீண்டும் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் எங்களது தரப்பு கோரிக்கையில் கொடுத்து அவரிடம் தெளிவாக எடுத்துரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் காரணமாக ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் இன்று 3-வது நாளாக கடைகளை அடைத்துள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநேரம் சாலையோர ஜவுளி கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

    • பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    • பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் வியாபாரிகள் தொடர்ந்து ரவுடிகளால் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது.மேலும் கடைகளை குறிவைத்து கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.

    இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை போலீசில் புகார் செய்தும் ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளை ரவுடி கும்பல் மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதனால் பொன்னேரி பகுதியில் வியாபாரிகளும், பொது மக்களும் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வியாபாரிகளை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க என்று கூறி பொன்னேரியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    பொன்னேரியி சுற்று வட்டார பகுதியில் உள்ள வேண்பாக்கம் திருவாயர்பாடி, பொன்னேரி பஜார் வீதிஉட்பட இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையே ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது. அப்போது, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீசார் ரோந்துவரவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொதுச் செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் பிரகாஷ் சர்மா உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் ரவுடி கும்பல் ஏராளமான கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

    இதே போல் கடந்த வாரம் முட்டை கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. வியாபாரிகளை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பதும் அதிகரித்து உள்ளது.

    இது பற்றி போலீசில் புகார் செய்தும் ரவுடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளையும் குறி வைத்து ரவுடிகள் மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாரி டம் வியாபாரிகள் கூறும் போது, கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கடைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் அதிரிக்க தொடங்கி உள்ளன. எனவே ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது, ரவுடிகளின் அட்டகாசம், கடைகளில் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், பொன்னேரி பகுதி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் ரவுடிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.
    • சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை மூலம் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு வாய்க்கால்கள் மூலம் விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஒருதரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் இந்த திட்டம் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறினர்.

    இதுதொடர்பாக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 6-ந்தேதி இரவு 1 மணி வரை பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. மறுநாள் 7-ந்தேதி விவசாயிகளிடம் கலெக்டரும் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி அன்று மாலையே விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையம் என்ற பகுதியில் தொடங்கினர்.

    போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.

    விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று விசைத்தறிகள் மூடப்படும் என்று அறிவித்தனர்.

    இதையடுத்து சென்னிமலை வட்டாரத்தில் இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது, சென்னிமலை டவுன் மற்றும் வெள்ளோடு, ஈங்கூர் மற்றும் கிராம புறங்களிலும் மளிகை, காய்கறி கடை, பால் கடை, பைக் ஒர்க்ஷாப், உரக்கடை, டீ கடைகள் உள்பட சிறிய பெட்டிகடை முதல், பெரிய டிபாட்மெண்டல் ஸ்டோர் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

    விவசாயிகள் போராட்டத்திற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடி உள்ளனர். மருத்து கடைகள் மட்டும் செயல்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னிமலை பால்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் கடைகளும் இயங்காது என அறிவித்துள்ளனர்.

    இதேபோல் சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை. இதனால் ரோடுகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, சென்னிமலை வட்டாரத்தில் முழு கடையடைப்பு நடக்கிறது. ஆனால் பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழக்கம் போல் இயங்கின.

    இதேபோல் பெருந்துறை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போலீஸ் நிலையம் ரோடு, ஈரோடு, பவானி, கோவை, சென்னிமலை செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் சேனிடோரியம், சென்னிவலசு, காஞ்சிக்கோவில், துடுப்பதி, சீனாபுரம், பீரங்கிமேடு, சிப்காட் பகுதி ஆகிய பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. கடைகள் அடைப்பு காரணமாக சென்னிமலை, பெருந்துறை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சி, கரட்டுப்பாளையம் ஊராட்சி, குருமந்தூர், கோட்டுகுள்ளாம்பாளையம், நம்பியூர் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    • கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தன மாக நடைபெறுவதை கண்டித்து நடத்தப்படுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி கடை வீதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்த தாரர் அலட்சிய போக்கை கண்டித்து கடை யடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியா வூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொரு ளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

    கூட்டத்தில் விக்கிர வாண்டி கடைவீதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம் பங்கள் மாற்றியமைக்கும் பணிக்கு நியமனம் செய்யப் பட்ட ஒப்பந்ததார் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தனமாக நடைபெறுவதை கண்டித்தும், தினமும் வயதான முதியோர்கள், பொதுமக்கள் சாலையில் விழுந்து அடிபட்டு பாதிக்கப் படுவதை கண்டித்தும் வரும் மே 3-ந் தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை மூடி கண்டன ஆர்பாட்டம் செய்வது எனவும், மே 5-ந் தேதி வணிகர் தினத்தன்று கடை விடுமுறை விட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றினர். இதில் சங்க துணைத் தலைவர்கள் மணி வண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமார கிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.
    • ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் விவசாயிகள், கட்சியினர் பல்வேறு ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நடந்த 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.

    இந்த நிலையில் உத்தனப்பள்ளி பகுதியில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது. அதில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பேருந்தில் ஏறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்று வந்து பயனடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதிலிருந்து பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்கவில்லை. இதனால் கிராம பகுதியான கபிலர் மலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பேருந்தில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோமீட்டர் சென்று பேருந்து ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலை பகுதியில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த பேருந்து போக்குவரத்து வசதிகளை போலவே மீண்டும் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கபில குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

    ெகாரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரியும், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்தும் ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்னர். அதன்படி இன்று பொதுமக்கள் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து கபிலர்மலை முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேருந்து இயக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    • அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
    • கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

    ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

    இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    • மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ந் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
    • மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை மறுநாள் (7-ந் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் வண்டி உரிமையாளர் சங்கம், அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×